இவராக வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல்ல. இவர்தான் பொருப்பாளி. எனவே அண்ணனுக்கு கொஞ்சமாவது நீதி நேர்மை இருந்தால் பத்திர நகல் உள்ள ஜாக் ஜமாத்திடம் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஒப்படைக்கவேண்டும்.
Saturday 3 October 2009
இவராக வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல்ல. இவர்தான் பொருப்பாளி. எனவே அண்ணனுக்கு கொஞ்சமாவது நீதி நேர்மை இருந்தால் பத்திர நகல் உள்ள ஜாக் ஜமாத்திடம் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஒப்படைக்கவேண்டும்.
சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் செய்வது நபி முறைப்படி சரியா ?:
சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் 11.8.2009 இமயம் டி.வி.யில் பேட்டி அளித்ததை மனோஇச்சை.com-ல் வெளியிட்டுள்ளனர்.அதில் எதிர் தரப்பினரை தரக்குறைவாக பேசியும், தான் செய்தது நபி முறைப்படி சரி என்பது போலவும் பேசியுள்ளார்கள்.
ஆனால் அவ்விருவரும் ஊர் ஜமாத்தினருக்கு கொடுத்த வாக்கும், எழுதி கொடுத்ததையும் தவறான வழிகாட்டுதலின் பேரில் மறைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
வாய்மொழியாக தந்த வாக்கு :
1994 ஆம் வருடம் திறப்பு விழா நடத்தி ஊர் ஜமாத்தினர் பலநூறு மக்கள் முன்பு இப்பள்ளியை வக்ஃபு செய்வதாக அறிவித்தும், ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்தும் உள்ளார் சயீது ஹாஜியார்.
எழுத்து மூலமாக தந்த வாக்கு :
2009 ஜனவரி மாதம் பள்ளியின் பொருளாதாரத்திற்கு தான் பொருப்பு அதன் மற்ற காரியத்திற்கு ஊர் ஜமாத் பொருப்பு என எழுத்து மூலமாக வாக்கு தந்துள்ளார் சயீது ஹஜியார்.
1994 ஆம் வருடம்முதல் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என மெளனமாக இருந்துவிட்டு இது எனது இடம் எனது இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என இப்பொழுது கூறுவது நபி வழியா ? மனோஇச்சையா ?
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வக்ஃபு செய்யப்படும்வரை அப்பள்ளியின் நில உரிமையாளராக ஹாஜியா அம்மத்தூர் ரஹீமாவும் கட்டிடம் கட்டிய கட்டிட உரிமையாளராக சயீது ஹாஜியார் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால் எப்பொழுது வக்ஃபு செய்யப்பட்டுவிடுமோ (வக்ஃபு என்பது அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்து விடுவது) இப்பொழுது அது அல்லாஹ்வின் இல்லமாக அதாவது அதன் உரிமையாளனாக அல்லாஹ் ஆகிவிடுகின்றான். இப்பொழுது அது வக்ஃபு சொத்தாகவும் மாறிவிடுகிறது. அதன்பிறகு எனது சொத்து என்றோ, நான் கட்டிய பள்ளி என்றோ உரிமைகொண்டாட எவ்வித உரிமையும் இல்லை. அவ்வாறு அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்த பின் அதில் உரிமை கொண்டாடும் பட்சத்தில்,
யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிறாறோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் அதேபோன்று ஒன்றை கட்டுகிறான்.
என்ற நன்மையை இழப்பதோடு இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டதாகிவிடும். அதுமட்டுமின்றி ஒரு முஸ்லிம் வாக்கு தந்தால் அதனை நிறைவேற்றுவது அவரின் மீது கடமையாகும். அது விஷயத்தில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ, அவர்கள்தான், (குற்றம் பிடிக்கப் படமாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.
எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிகளையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு ;மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்) பாக்கியமுமில்லை. அன்றி, அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான். (அன்புடன்) அவர்களை இறுதிநானில் திரும்பிப் பார்க்கவுமாட்டான். அவர்களைப் புனிதப் படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள். நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் பேசுவதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதுமட்டுமல்ல ஒருபொருளை அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்துவிட்டு அதனை திரும்பப் பெற முயற்சிப்பதோ அல்லது அதில் உரிமை கொண்டாடுவதோ எவ்வளவு கேவலமான செயல் என்பதையும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாக கொடுத்து விட்டேன்) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள் “ நீங்கள் அதை வாங்காதீர்கள், அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே ! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் உமர்(ரலி) அவர்கள் தான் தானமாக கொடுத்த குதிரையை கொடு என்று கேட்கவில்லை. அவரின் பராமரிப்பு சரியில்லாததால் அது அவருடைய குதிரைதான் என கருதி அதனை பணம் கொடுத்து வாங்கத்தான் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கிறார்கள். ஆனால் நபி(ஸல்) அதனையும் தடை செய்து மேற்படி இது இழிவான செயல் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். தான் கொடுத்த வாக்கை மீறுவது மட்டுமின்றி தான் தானமாக அல்லாஹ்விற்காக கொடுத்த பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுவது நபி வழியா ? மனோஇச்சையா ? என்று இருவரும் அல்லாஹ்விற்காக யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பது இருவருக்கும் நல்லது.
சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாட்டை இன்னும் சற்று தெளிவாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். ஒருவர் பள்ளிவாசலுக்கு அல்லாஹ்விற்காக 4 டியூப்லைட்டுகள் மற்றும் 4 மின் விசிறிகள் தானமாக போடுகிறார். ஒருமாதம் கழித்து அதில் ஒரு டியூப்லைட்டையும் ஒரு மின் விசிறியையும் கழற்றி எடுத்துச் செல்கிறார் அதனைப் பார்த்த அப்பள்ளியின் நிர்வாகி ஏனப்பா இவ்வாறு செய்கிறாய் ? இது பள்ளிவாசலுக்குரியதாயிற்றே ? இவ்வாறு செய்வது கூடாது என தடுக்கிறார். ஆனால் அந்த நபரோ இது நான் வாங்கியது, எனக்கு சொந்தமானது இதோ எனது பெயரில் நான் வாங்கியதாக ரசீது உள்ளது. எனவே இதை நான் யாருக்கு விரும்புகின்றேனோ அவருக்கு இப்பொழுது கொடுப்பேன். என்று சொன்னால் அவரை என்னவென்று சொல்வது ? மேலும் அவர் செய்வது சரிதான் அவர் வாங்கியதாக அவர் பெயரில்தான் ரசீதும் உள்ளதே ! என்று அருகிலுள்ள மற்றொருவர் அந்நபருக்கு ஆதரவாக சொல்வாரானால் அவரையும் என்னவென்று சொல்வது ? இதைப்போன்றதுதான் சயீது ஹாஜியார்,அவரது துணைவியார் மற்றும் அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாடுகள் உள்ளது.
அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதுபடி ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார். மேலும் நபி(ஸல்) கூறியபடி தனது வாந்தியை தானே சாப்பிடும் இழுநிலைக்கும் செல்லமாட்டார். எனவே சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? அல்லது அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
இவன்.
Friday 2 October 2009
தமிழ்நாட்டில் அண்ணன் பி.ஜெ.யின் புண்ணியத்தால் பிரபலமாகியுள்ள ஊர் தொண்டி அருகிலுள்ள S.P. பட்டணம். ஆரம்பத்தில் ஒரு தரப்பினரின் (அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்) வாதத்தை மட்டும் பார்த்து நிலைமையை கணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை. ஆனால் இப்பொழுது ஊர் ஜமாத்தினரின் விளக்கமும் வந்துள்ளதால், இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஓர் உண்மையை அவதானிக்கமுடிகிறது. அதனடிப்படையில் இப்பிரச்சினையை இஸ்லாமிய ஒளியில் ஆய்வு செய்து யார் பக்கம் உண்மை உள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்வோம்.
அண்ணன் பி.ஜெ.யின் “பில்ட் அப்புகள்” :
தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்தினர் தந்த விளக்கத்தையும், போட்டோக்களையும், வீடியோ கிளிப் (முழு வீடியோ பார்க்க அண்ணன் பி.ஜெ.யின் மனோஇச்சை.com செல்லவும்) போன்றவைகளை அவர்களே தத்தமது இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதனை அப்படியே கீழே பதியப்பட்டுள்ளது. அதன்மீது இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கி அவை அனைத்தையும் கவனமாக படிக்கவும், கேட்கவும்.
மேற்படி பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் நமக்கு விளங்கும் உண்மை என்ன ? ஹாஜியா அம்மத்தூர் ரஹிமா அம்மையார் பெயரில் பள்ளிவாசலின் நில பட்டா உள்ளது. அவரது கணவர் சயீது ஹாஜியார் தனது சொந்த செலவில் பள்ளிவாசளை கட்டிமுடித்து பராமரித்தும் வருகிறார். அவர் அப்பள்ளியை நிர்வகிக்கும் பொருப்பை தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத் வசம் கொடுக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது அது அவர்களின் உரிமையும் கூட. ஊர் ஜமாத்தினர் அதனை அபகரிக்க நினைப்பது அநியாயம் இல்லையா ? என்று தான் சாமானியரும் விளங்குவர்.
அதனை நம்பிய தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத்தினரும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் மழையென்றும் பாராமல் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்கினர். செய்திகளை முந்தித்தருவதில் முன்னனியில் இருக்கும் அண்ணன் பி.ஜெ. தான் சொல்வதுதான் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை என்ற பிரம்மையை உண்டுபண்ணி அடுத்தவர்களை உசுப்பி விட்டு குசும்பு பன்னுவதில் அவரை அடிக்க ஆளில்லை.
ஆனால் இவரது பில்ட்அப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாக ஊர் ஜமாத்தினரின் விளக்கம் இப்பொழுது வெளியாகியுள்ளது. இதன்மூலம் அண்ணன் பி.ஜெ.யின் உண்மை மற்றும் நேர்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அதனை கீழேயுள்ள படத்தின் மீது இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கவும்.
வெளிச்சத்திற்கு வந்த உண்மை :
அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் முன் சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாடுகள் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதிற்கு உகந்ததா ? என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.
Thursday 3 September 2009
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதைச் செவியேற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமலான் மாதத்தின் வருகைக்காகச் சொர்க்கம் வாசனைப் புகை காட்டப்பட்டு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அது அலங்காரம் செய்யப்படுகிறது. ரமலான் மாதத்தின் முதலிரவு வந்து விட்டால் அர்ஷின் கீழிலிருந்து ஒரு காற்று வீசுகிறது. அதற்கு மஸீரா என்று பெயர். (அக்காற்று வீசியவுடன்) சொர்க்கத்துடைய மரங்களின் இலைகளும், சொர்க்கத்துக் கதவுகளிலுள்ள சங்கிளி வலையங்களும் (ஆடி அசைந்து) ஒரு வித இன்னிசையை எழுப்புகின்றன. கேட்பவர்கள் அதைவிட இனிமையான இசையை என்றுமே கேட்டிருக்க முடியாத மனோ ரம்மியமான இசையை அவை எழுப்புகின்றன.
அப்பொழுது ஹூருல் ஈன் என்னும் சொர்க்கக் கன்னியர் தம் இடங்களை விட்டு வெளியாகிச் சொர்க்கத்து (மாளிகைகளின்) முகப்புகளில் வந்து நின்று கொண்டு எங்களுக்காக அல்லாஹ்விடம் பெண் பேசி திருமணம் செய்து கொள்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? என்று அழைக்கின்றனர். பிறகு, ‘சொர்க்கத்தின் காவலர் ரிள்வான் அவர்களே ! இது என்ன இரவு ?’ என்று கேட்கின்றனர். அதற்கு ரிள்வான் அவர்கள் லப்பைக் என்பதாகக் கூறி, ‘இது ரமலான் மாதத்தின் முதலிரவு. இன்று முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரில் நோன்பு நோற்பவர்களுக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளிப்பார்.
மேலும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது : பிறகு, அல்லாஹூதஆலா (சொர்க்கத்தின் காவலரிடம்) ‘ரிள்வானே ! சொர்க்கத்தின் வாசல்களை நீர் திறந்து வைப்பீராக ! (நரகத்தின் காவலரிடம்) மாலிக்கே ! அஹ்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரில் நோன்பு வைத்தவர்களுக்காக நரகத்தின் வாசல்களை அடைத்து விடுவீராக ! ஜிப்ரீலே ! என் ஹபீபாகிய முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரின் நோன்பில் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதற்காக பூமிக்குச் சென்று அட்டூழியம் புரியும் ஷைத்தான்களை நீர் கைது செய்து கழுத்தில் விலங்கிட்டு, பிறகு அவற்றை கடலில் தூக்கி எறிவீராக !’ என்று கூறுகிறான்.
மேலும், அல்லாஹூ தஆலா, ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் மூன்று தடவை பின்வரும் வாசகங்களைச் சப்தமிட்டுக் கூறும்படி ஓர் அறிவிப்பாளருக்குக் கட்டளையிடுகிறான். “கேட்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவர் கேட்பதை நான் கொடுக்கிறேன். தவ்பாச் செய்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவருடைய தவ்பாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவ மன்னிப்புத் தேடுபவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவருக்கு நான் பாவ மன்னிப்பளிக்கிறேன். ஒரு சீமானுக்குக் கடன் கொடுப்போர் யாருமுண்டா ? அவன் ஒன்றும் இல்லாதவனல்ல, மேலும் சிறிதும் குறைக்காமல் சம்பூர்ணமாக (முழுமையாக) நிறைவேற்றுபவன்” என்று அவர் சப்தமிடுகிறார்.
மீண்டும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது : அல்லாஹூ தஆலா ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நேரத்தில் நரகத்திற்குரியவர்களான பத்து இலட்சம் நபர்களுக்கு நரகிலிருந்து விடுதலை அளிக்கிறான். ரமலான் மாத்தின் கடைசி நாளில் அம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விடுதலை அளித்த அளவுக்கு ஒரே நாளில் விடுதலை செய்கிறான். லைலத்துல் கத்ரு இரவு வந்துவிட்டால் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹூ தஆலா கட்டளையிடுகிறான். அவர்கள் மலக்குகளுடைய ஒரு பெருங் கூட்டத்துடன் பூமிக்கு வருகை தருகிறார்கள். அவர்களிடம் ஒரு பச்சைக் கொடியும் இருக்கும். அக்கொடி கபாவின் மீது நட்டு வைக்கப்படும். அப்பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நூறு இறக்கைகள் இருக்கும். அவற்றில் இரண்டு இறக்கைகளை அந்த இரவில் மட்டும்தான் விரிக்கிறார்கள். அவ்விரண்டையும் கிழக்கிலிருந்து மேற்கு வரை விரித்து வைத்திருப்பார்கள்.
பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குகளை நோக்கிப் பிரிந்து செல்லுமாறு கூறுகிறார்கள். அவர்கள் சென்று (உலகெங்கிலும்) நின்றவராக, உட்கார்ந்தவராக, தொழுபவராக, திக்ரு செய்பவராக இருக்கின்ற அனைவருக்கும் ஸலாம் கூறி அவர்களிடம் முஸாஃபஹாச் செய்கின்றனர். அவர்களுடைய துஆக்களுக்கு ஆமீன் கூறுகின்றனர். இது ஃபஜ்ரு உதயமாகும் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பஜ்ரு உதயமானவுடன், ‘மலக்குகளே ! புறப்படுங்கள் !’ என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது அந்த மலக்குகள், ‘ஜப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே ! அல்லாஹூ தஆலா அஹ்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்திலுள்ள முஃமின்களின் தேவைகள் விஷயத்தில் என்ன முடிவு செய்துள்ளான் ?’ என்று கேட்பார்கள். அதற்கு ஜப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அல்லாஹூ தஆலா அவர்களின் பக்கம் கவனம் செலுத்தி நான்கு நபர்களைத் தவிர மற்றவர் அனைவருக்கும் மன்னிப்பளித்து விட்டான்” என்று கூறுவார்கள்.
இதனைக் கேட்ட ஸஹாபாக்கள், ‘யாரஸூலல்லாஹ் ! அந்த நான்கு நபர்கள் யார் ?!’ என்று கைட்டனர். (1) மது அருந்தும் பழக்கமுடையவன். (2) தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்யாமல், அவர்களை ஒதுக்குபவன். (3) உறவு முறையைத் துண்டித்து வாழ்பவன். (4) பொறாமை கொள்கிறவன், அதாவது மனிதர்களிடம் தொடர்பைத் துண்டித்து வாழ்பவன்” என பதில் அளித்தார்கள்.
பிறகு ஈதுல் ஃபித்ருடைய இரவு வந்ததும் (வானுலகில்) அதற்குப் “பரிசு வழங்கும் இரவு” என்பதாகப் பெயரிடப்படுகிறது. ஈதுப் பெருநாள் சுப்ஹூ நேரத்தில் அல்லாஹூ தஆலா மலக்குகளை உலகிலுள்ள ஊர்கள் அனைத்திற்கும் அனுப்புகிறான். அவர்கள் பூமிக்கு வந்து தெருக்கள், பாதைகள் ஆகியவற்றின் முகப்புகளில் நின்றுகொண்டு, ‘முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களே ! தயாளம் மிக்க இரட்சகனின் சந்நிதானத்திற்குச் செல்வீர்களாக ! அவன் பெருங் கொடையளிப்பவன் ; மகத்தான குற்றங்களையும் மன்னிக்கிறவன்’ என்று சப்தமிடுகின்றனர். அந்தச் சப்தத்தை மனிதர்கள், ஜின்கள் இருசாராரைத் தவிர மற்றுமுள்ள அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தும் கேட்கின்றன.
பின்னர் மனிதர்கள் ஈதுகாவிற்குச் செல்லும் பொழுது அல்லாஹூ தஆலா மலக்குகளை நோக்கி, ‘ஒரு கூலிக்காரருக்கு, வேலையை முடித்தபின் என்ன பிரதிபலன் கொடுப்பது ?’ என்று கேட்கிறான். அதற்கு மலக்குகள்,’எங்கள் இரட்சகனே ! எங்கள் எஜமானனே ! அவருக்குரிய பிரதிபலன், அவருடைய கூலியைப் பரிபூரணமாகக் கொடுப்பதாகும்’ என்று கூறுகின்றனர்.
“என்னுடைய மலக்குகளே ! அவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்து, தராவீஹ் தொழுததற்குப் பிரதியாக என்னுடைய திருப்தியையும் மன்னிப்பையும் நான் வழங்கிவிட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்” என்று அல்லாஹூ தஆலா கூறுகிறான்.
பிறகு அல்லாஹூ தஆலா அடியார்களை நோக்கி, ‘என்னுடைய அடியார்களே ! என்னிடம் நீங்கள் கேளுங்கள். என்னுடைய கண்ணியத்தின் மீதும், என் கம்பீரத்தின் மீதும் ஆணையாக இன்று உங்களுடைய இந்தக் கூட்டத்தில் உங்களுடைய மறுமையின் விஷயத்தில் எதனை நீங்கள் என்னிடம் கேட்டாலும் அதனை நிச்சயம் நான் கொடுத்திடுவேன். உங்களுடைய உலக விஷயத்தில் எதையேனும் நீங்கள் கேட்டால் அதில் உங்களுக்குப் பலன் தரும் விஷயத்தில் நான் கவனம் செலுத்துவேன். என்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக ! என்னுடைய கட்டளைகளை நீங்கள் நினைவில் கொண்டு கவனித்து வாழும் காலமெல்லாம் உங்களுடைய தவறுதல்களை நான் மறைத்திடுவேன். என் கண்ணியத்தின் மீதும் கம்பீரத்தின் மீதும் ஆணையாக ! நான் உங்களைக் குற்றவாளிகள், மேலும் காபிர்களுக்கு மத்தியில் கேவலப் படுத்தமாட்டேன் ; இழிவு படுத்தமாட்டேன். இப்பொழுது
“நீங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னைத் திருப்தியுறச் செய்தீர்கள். நான் உங்களைப் பொருந்திக் கொண்டேன்” என்று கூறுகிறான்.
இந்த உம்மத்தினர் ரமலான் மாதத்தை முடித்து ஈதுல் பித்ரைக் கொண்டாடும் நாளில் அல்லாஹூ தஆலா அவர்களுக்கு வழங்கிய வெகுமதியைக் கண்டு மலக்குகள் மகிழ்ச்சியடைந்து நற்செய்தி கூறுகின்றனர்” என்பதாக நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
யா அல்லாஹ் ! எங்களை அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களாக ஆக்கியருள்வாயாக. ஆமீன் !
நன்றி : தொகுப்பு நூல் : “அமல்களின் சிறப்புகள்”, பாகம் : ரமலானின் சிறப்புகள்.
இவன்.
M.முஹம்மது பதுருதீன்.
Thursday 26 February 2009
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பாகம் – 2
அந்த வரிசையில் அண்ணன் பி.ஜெ. கூறும் லைலத்துல் கத்ர் இரவு குற்றச்சாட்டும் ஒன்று. அதனை கீழே உள்ள வீடியோ கிளிப்பில் கேட்கவும்.
பி.ஜெ.யின் குழப்பம் : லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமழான் மாதத்தில் தான் என்பதில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒரு மித்த கருத்தில் இருக்க ஷஃபான் மாதத்திலும் லைலத்துல் கத்ர் இருப்பதைக் கண்டதாக இப்னு அரபி கூறியதாக ஜக்கரியா ஸாஹிப் தஃலீம் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உலமாக்களின் விளக்கம் : லைலத்துல் கத்ர் ரமழான் மாதத்தில் தான் என்பதில் முஸ்லிம்கள் ஒரு மித்த கருத்தில் இருக்கிறார்களாம். இது எவ்வளவு பெரியபொய் லைலத்துல் கத்ர் எந்த இரவு எனக் கணிக்கும் விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 60க்கு மேற்பட்ட முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றனவென்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் மடமைக்கு இன்னுமோர் எடுத்துக் காட்டு.
அக்கருத்துக்களில் “ரமழான் அல்லாத ஏனைய மாதங்களிலும் அவ்விரவு வரலாம்” எனவும் ஒரு கருத்து இருக்கின்றது இதோ :
“அவ்விரவு முழு வருடத்தில் ஏதோ ஓர் இரவில் வரலாம்” இது இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா, அபூ ஹனீபா, அபூ யூஸூப், முஹம்மத் மற்றும் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களின் பிரபல்யமான கருத்து
நூல் : பாகம்/பக்கம் :
1. ஸஹீஹ் முஸ்லிம் 8/52/1169
2. அப்துர்ரஸ்ஸாக் 4/194/7730
3. தஹாவி 2/54
4. ஆரிழதுல் அஹ்வதி 4/07
5. தம்ஹீத் 1/403/405
6. மஆரிபுஸ்ஸூனன் 5/517/518
7. பத்ஹூல் பாரி 4/321
8. உம்ததுல் காரீ 11/187
9. இர்சாதுஸ்ஸாரி 4/596
10. நய்லுல் அவதார் 4/289
11. அவ்ஜஸூல் மஸாலிக் 5/2
12. ஷர்ஹூஸ்ஸத்ர் 27
13. ஸூதூஉல்பத்ர் 71
14. ஷரஹூ முஸ்லிம் 8/47
15. மிர்காத் 4/507
16. ஷரஹூல் உப்பி 4/128-136
17. ஸனுஸி 4/136
இமாம் தர்தீஹ் (ரஹ்) கூறுகிறார்கள் “அவ்விரவு குறித்த ஒரு இரவிலே இருக்காது மாறாக முழு வருடத்திலும் ஏதோ ஒர் இரவில் மாறி மாறி வரும்” இது இமாம்களான மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், மற்றும் பெருந்திரலான அறிஞர்களின் கருத்துமாகும். இது தான் முதன்மை வகிக்கும் மிகச் சரியான கருத்தாகும்.
நூல் : பாகம்/பக்கம் :
1. அவ்ஜஸூல் மஸாலிக் 5/253
2. தம்ஹீத் 1/403
ஷாஹ் வலிய்யுல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்கள் “லைலத்துல் கத்ர் ஒரு வருடத்தில் இரு முறை வருகிறது 1. ரமழான் மாதத்தின் கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் 2. வருடத்தின் ஏனைய மாதங்களின் ஒரு இரவில்”.
நூல் : பாகம்/பக்கம் :
1. அவ்ஜஸூல் மஸாலிக் 5/255
2. ஹூஜ்ஜதுல்லா 2/99
இமாம் அபூபக்கர் ராஸி (ரஹ்) “லைலத்துல் கத்ர் குறித்த ஒரு மாதத்துக்குச் சொந்தமானதல்ல”
நூல் : பாகம்/பக்கம் :
1. உம்ததுல் காரீ 11/187
2. இர்ஷாதுஸ்ஸாரி 4/596
நல்லோர்கள் நடு நிலையாய் நின்று பார்க்கட்டும் லைலத்துல் கத்ரை ஷஃபான் மாதத்தில் கண்டதாக இப்னு அரபி (ரஹ்) அவர்கள் கூறியது குர்ஆனுக்கு முரண்பட்ட விஷயமாக இருந்தால் இதே கருத்தைச் சொன்ன கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களான இப்னு மஸ்ஊத்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் இமாம்களான இக்ரிமா, அபூஹனிபா, அபூயூஸூப், முஹம்மத், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், தர்தீஹ், அபூபக்கர்ராஸி, ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) ஆகியோர்களைப் பார்த்தும் இந்த வஹ்ஹாபிகள் “இவர்களெல்லாம் குர்ஆனுக்கு முரண்பட்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என குரல் எழுப்பவார்களா ?
உண்மை என்னவென்றால் ஸூபித்துவத்தின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னு அரபி (ரஹ்) அவர்கள் மீது பி.ஜெ. மற்றும் அவர் தொண்டர்களுக்கு ஏற்பட்ட தனிக் கோபம், கொள்கை முரண்பாடு என்பனவற்றின் காரணமாகவே இதே கருத்தை பல இமாம்கள் சொல்லியிருந்தும் இமாம் இப்னு அரபி அவர்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்.
இமாம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் (குர்ஆனுக்கு முரண்பட்ட ?!!) கருத்தை ஜகரிய்யா(ரஹி) அவர்கள் எழுதியதனால் அவர்களையும் அவர்களுடைய தஃலீம் தொகுப்பையும் சாடுவதாக இருந்தால் இதோ முழு உம்மத்தினர்களும் தலைமேல் வைத்து மதிக்கும் மேற்கூறப்பட்ட இமாம்கள் தங்கள் ஆயுளை அர்ப்பணித்துத் தொகுத்த நூல்களிலும் (குர்ஆனுக்கு முரண்பட்ட ?!!) அதே கருத்து வந்திருக்கிறதல்லவா ? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைக் கவணிக்கும் விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் உள்ள கருத்து முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் போதுதான் இப்னு அரபி (ரஹ்) அவர்களுடைய கருத்தையும் எழுதினார்களே தவிர அக்கருத்தைத் தனது கொள்கையாகவோ, அல்லது அதுதான் பலமான கருத்து என்றோ கூறவில்லையே. அப்படியென்றால் அல்லாஹ் அல் குர்ஆனில் பற்பல இடங்களில் இஸ்லாமிய இறையியற் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட பற்பல கருத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளான். இதனால் அக்கருத்துக்களை அல்லாஹ் ஆதரிக்கிறான் என்ற அர்த்தமா ?!! இதனால் குர்ஆனையும் ஒதுக்கித் தள்ளப் போகிறீர்களா ?!! அப்படியானால் பல்லாயிரம் உள்ளங்களைப் பண்படுத்திப் புத்துயிர் கொடுத்து வரும் தஃலீம் தொகுப்புடன் மாத்திரம் ஏன் இந்தக் குதர்க்கம்.?! வஸ்ஸலாம் !
(நன்றி : வெளியீடு மௌலானா ஸகரிய்யா (ரஹி) ஆய்வு கூடம், வெளிகாமம், இலங்கை.)
"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகின்றோம். அது பொய்யை நொருக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது."
(அல் குல்ஆன் : 21 :18)
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக !(அல் குர்ஆன் : 17 :81)
"சத்தியமே வெல்லும் ; அசத்தியம் அழிந்து போகும்" என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே ! வஆகிர தாவானா வனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.விளக்கங்கள் ஓய்வதில்லை… !
இவன்.
முஹம்மது பதுருதீன்.
Sunday 8 February 2009
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அல்லாஹ்வின் பாதையாகிய தப்லீஃக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதன் செயல்பாடு மற்றும் நோக்கத்தை குறைசொல்ல முடியாதோர் உலக ஆதாயங்கள், விதண்டாவாதங்கள் மற்றும் குறிப்பாக தப்லீகின் தஃலிம் கிதாபுகளில் (அமல்களின் சிறப்புகள்) சொல்லப்பட்ட இறைநல்அடியார்களின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்ற சில அற்புத உண்மை சம்பவங்கள் ஆகியவைகளை காரணங்கள் காட்டி இந்த அல்லாஹ்வின் பாதையின் மீது குறை சொல்ல முற்படுகின்றனர்.
அந்த வரிசையில் அண்ணன் பி.ஜெ. கூறும் சடத்துவ குற்றச்சாட்டும் ஒன்று. அதனை கீழே உள்ள வீடியோ கிளிப்பில் கேட்கவும்.
பி.ஜெ.யின் குழப்பம் : மரணித்து சந்தூக்கில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மகான் திடீரென சந்தூக்கில் இருந்து எழுந்து பெரியார்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை எனக் கூறி மீண்டும் படுத்துக் கொண்டதாக தஃலீம் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
உலமாக்களின் விளக்கம் : இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது தனது நல்லடியார்களின் மூலமும் இறைநேசச் செல்வர்களின் மூலமும் கராமத் எனப்படும் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகளை நடாத்திக் காட்டுவது சர்வலோக சக்தனென நாம் நம்பி ஏற்றிருக்கும் அல்லாஹ்வுக்கு ஒன்றும் முடியாத காரியமோ அது குர்ஆனுக்கு முரண்பட்டதோ அல்ல இது போன்ற சம்பவங்கள் வரலாற்றில் நிறையவே நடந்திருக்கின்றன. இமாம் இப்னு அபித் துன்யா (ரஹ்) அவர்கள் மரணித்த பின்னும் பேசிய இறைநேசச் செல்வர்களின் வரலாறுகளை ஒன்று திரட்டி " கிதாபு மன் ஆஷ பஃதல் மெளத்" (மரணித்த பின்னும் வாழ்ந்தவர்கள்) என்ற பெயரில் ஒரு தனி நூலையே எழுதியிருக்கிறார்கள். இமாம் பைஹகி அவர்கள் கூறுகிறார்கள் : மரணத்துக்குப் பின்னும் பேசிய ஒரு பெருங்கூட்டத்தினரின் சம்பவங்கள் ஸஹீஹான பலமான ஸனதின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சடத்துவ நோக்கில் இஸ்லாத்தை நோக்குபவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் என்னவோ புராதான கட்டுக் கதைகளாகவே தோன்றும்.
இதோ வரலாற்றிலிருந்தே உங்களுக்கு ஆதாரம் காட்டுகிறோம். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மரணித்து போர்வையால் மூடப்பட்டிருந்த கண்ணியத்துக்குரிய ஸஹாபி ஸைத் இப்னு ஹாரிஜா (ரலி) அவர்கள் பேசியதை கூடியிருந்த ஸஹாபாக்களும், தாபியீன்களும் பார்த்தார்கள்.
இந்த சம்பவத்தை இமாம் பைஹகீ, இப்னு ஆபித் துன்யா, ஹிஷாம் இப்னு அம்மார் போன்ற இமாம்கள் ஸஹீஹான பலமான ஸனதின் மூலம் அறிவித்துள்ளதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஸஹாபி மரணித்ததன் பின் பேசிய வரலாற்று உண்மையை கீழ் வரும் ஹதிஸ் மற்றும் வரலாற்று நூற்களில் கண்டு கொள்ளலாம்.
நூல் : ஆசிரியர் இமாம் : பாகம்/பக்கம் :
1.அத்தாரீஹூஸ் ஸகீர் இமாம் புகாரி 1/61
2.அல் மஃரிபா யஃகூப் பஸவி 1/3010
3.அல்ஜரஹூ வத்தஃதீல் இப்னு அபீ ஹாதிம் 3/505/4834
4.அத்தபகாதுல் குப்ரா இப்னு ஸஃத் 8/364
5.அல் முஃஜமில் கபீர் தப்ரானி 5/218-219/5144-5145
6.அல் இஸ்தீஆப் இப்னு அப்தில் பர் 1/541
7.ஹில்யதுல் அவ்லியா அபூநுஅய்ம்
8.அத் தலாஇல் அபூநுஅய்ம் /511
9.தஹ்தீபுல் கமாலீ மிஸ்ஸி /2103
10.அல் முன்தழம் இப்னு ஜவ்ஸி 3/185
11.அல் பிதாயா வன்னிஹாயா இப்னு கஸீர் 6/158-159
12.அல் காஷிப் தஹபி 1/291/1748
13.உஸூதுல் காபா இப்னுல் அஸீர் 2/354/1831
14.அல் இஸாபா இப்னு ஹஜர் 2/498/2901
15.தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் 3/224/2204
16.மஜ்மஉஸ் ஸவாஇத் ஹைஸமி 5/180 – 7 /230
17.குலாஸதுல் கஸ்ரஜீ கஸ்ரஜி 1/380/2254
18.அல் காமில் பித்தாரீஹ் இப்னுஸ் அஸீர் 3/89
19.ஹயாதுஸ் ஸஹாபா யூசுப் கான்தலவி 3/843-844-45-46
இதற்கு இன்னும் பல பலமான சம்பவங்களை கூறலாம் விரிவஞ்சித் தவிர்க்கிறோம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். இதே போன்ற ஒரு சம்பவத்தை ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் மாத்திரம் எழுதி விட்டாலோ குர்ஆனுக்கு முரண்பட்டதாகவல்லவா போய் விடுகிறது. இது எவ்வளவு பெரிய அக்கிரமம் ?
யதார்த்தம் என்னவென்றால் இந்தியா முழுவதும் மட்டுமல்ல பன்நாட்டு மக்களிடமும் "ஷைகுல் ஹதீஸ்" என்ற புகழாரம் கொண்டு பிரபல்ய மடைந்திருந்த கிட்டத்தட்ட 50 வருடங்களாக ஹதீஸ் கலைக்கு மாபெரும் தொண்டாற்றி அரிய நூற்கள் பலதையும் தந்து சென்ற மாமேதை ஜகரிய்யா(ரஹ்) அவர்களின் மீது பீ.ஜே.க்கு ஏற்பட்ட பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் தான் அவர்களையும் அவர்களது நூற்களையும் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கக் காரணமே தவிர வேறில்லை. வஸ்ஸலாம்.
(நன்றி, வெளியீடு : மெளலானா ஸகரிய்யா (ரஹி) ஆய்வு கூடம். வெளிகாமம், இலங்கை)
வெளிச்சத்திற்கு வந்த பொய் :
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் எந்த விஷயம் (இறந்தவர் உடலோடு எழுந்து பேசுவது) அண்ணன் பி.ஜெ. அன்ட் குரூப்பிற்கு ஏ…கத்துவோம் சிந்தனையில் அடியெடுத்து வைக்கும்பொழுது பெரிய ஆதாரமாகத் தோன்றியதும், இறந்தவர் உடலுடன் சேர்ந்து வந்தால் பிரச்சினை இல்லை என ஒப்புக்கொண்டதும், இடியென முழங்கி, மழையெனப் பொழிந்து, கும்பகோணத்து சேற்று வயலில் ஏ…கத்துவோம் விளைச்சளை கண்டதும், அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் வெற்றி பெற வைத்ததுமான இந்த பிரச்சினையில்லாத பிரச்சினை தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் மட்டும் பிரச்சினையாகிப்போனது ஏன் ?
இறந்தவர் உடலோடு எழுந்து பேசுவது என்ற விவகாரம் அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் அண்ணன் பி.ஜெ. கூறியது உண்மையென்றால், தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் கூறியது பொய். அல்லது தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் அண்ணன் பி.ஜெ. கூறியது உண்மையென்றால், அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் கூறியது பொய். எனவே எந்த பொய்யை உண்மையென அண்ணன் பி.ஜெ. பொய் சொல்லப்போகிறார் ?
இடத்திற்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றும் பச்சோந்திக்கும், இடத்திற்கு தகுந்தாற்போல் தனது பேச்சை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றும் பி.ஜே.க்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நிரூபனம்.
சத்தியம் என்று வருகின்றபோது அங்கு பதில்கள் நெத்தியடியாக இருக்கவேண்டும். அசத்தியத்தின் கபாலங்கள் தெறித்தோடி மூலையைத் துளைத்து எடுக்கும் சுத்தியல் அடியாக இருக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வும் திருக்குர்ஆனில்,
"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகின்றோம். அது பொய்யை நொருக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது."
(அல் குல்ஆன் : 21 :18)
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக !
(அல் குர்ஆன் : 17 :81)
விளக்கங்கள் ஓய்வதில்லை… !
இவன்.
முஹம்மது பதுருதீன்.
Friday 23 January 2009
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
தொழுகை பரிபூரணமாகத் தேவையான விஷயங்கள் :
ஸூஃபியாக்கள் என்னும் ஞானமேதைகள் கூறுவதாவது : தொழுகையில் பன்னிரண்டாயிரம் விஷயங்கள் உள்ளன. அல்லாஹ் அவை அனைத்தையும் 12 செயல்களில் அமைத்துள்ளான். தொழுகை முழுமை பெறவும், தொழுகையின் பலன்கள் முழுமையாகக் கிடைப்பதற்கும் அப்பன்னிரண்டையும் பேணுதலுடன் கடைப்பிடித்து வருவது அவசியம்.1. மார்க்க அறிவு (இல்மு). "மார்க்க அறிவுடன் செய்யப்படும் குறைவான அமல் மார்க்க அறிவில்லாமல் செய்யப்படுகின்ற அதிகமான அமல்களை விடச் சிறந்ததாகும்." என்று நபி (ஸல்) அருளியள்ளார்கள்.
2. உலூச் செய்தல்.
3. உடை அணிதல்.
4. நேரம் அறிதல்.
5. கிப்லாவை முன்னோக்குதல்.
6. நிய்யத் செய்தல்.
7. தக்பீர் தஹ்ரீமா கட்டுதல்.
8. நிலை நிற்றல்.
9. குர்ஆன் ஓதுதல்.
10. ருகூஉ செய்தல்.
11. ஸஜ்தாச் செய்தல்.
12. இருப்பு இருத்தல்.
இவை அனைத்தும் முழுமை அடைவது இக்லாஸென்னும் மனத்தூய்மையினாலாகும். இப்பன்னிரண்டு செயல்களில் ஒவ்வொன்றிலும் மும்மூன்று பகுதிகள் உள்ளன.
1. (இல்மு) மார்க்க அறிவு சம்பந்தமான மூன்று பகுதிகள் :
1. பர்லுகள் எவை ? சுன்னத்துகள் எவை ? என்பதாகத் தனித்தனியே அறிந்து கொள்ளுதல்.2. உலூவிலும், தொழுகையிலும் உள்ள பர்லுகள் எத்தனை ? சுன்னத்துகள் எத்தனை என்பதாகத் தெரிந்து கொள்ளுதல்.
3. ஷைத்தான் எந்தெந்த சூழ்ச்சியினால் தொழுகையில் குழப்பத்தை உண்டாக்குகிறான் ? என்று அறிந்து கொள்ளுதல்.
2. உலூவில் மூன்று பகுதிகள் :
1. வெளி உறுப்புகளைச் சுத்தப்படுத்துவது போல் உள்ளத்தையும் வஞ்சகம், பொறாமை ஆகிய தீய குணங்களை விட்டும் சுத்தப்படுத்துதல்.2. வெளி உறுப்புகளை அழுக்கைவிட்டும் தூய்மைப்படுத்துவது போல் பாவங்களைவிட்டும் தூய்மைப்படுத்துதல்.
3. உலூவில் அளவுக்கு அதிகமாகவோ அளவைவிடக் குறைவாகவோ செய்யாமலிருத்தல்.
3. உடை சம்பந்தமான மூன்று பகுதிகள் :
1. ஹலாலான சம்பாத்தியத்தால் வாங்கியதாக இருப்பது.2. சுத்தமாக இருப்பது.
3. சுன்னத்தான முறைப்படி அணிவது.
கரண்டைக்காலை மறைக்காமலும், பெருமை, ஆடம்பரம் இல்லாமலும் அணிவதாகும்.
4. நேரம் அறிவதில் மூன்று பகுதிகள் :
1. சரியான நேரங்களைத் தெரிந்து கொள்வதற்கு வெயில், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கணக்குகனைக் கணித்து அறிந்து கொள்வது. (இக் காலத்தில் நேரங்களை அறியக் கடிகாரமுள்ளது.)2. பாங்கு சொல்லப்படும் நேரத்தைக் கவனத்தில் வைப்பது.
3. தொழுகையின் நேரங்களை எப்பொழுதும் மனதில் எண்ணங்கொண்டிருப்பது. ஏனெனில், நம்மை அறியாமலேயே தொழுகை நேரம் தவறி விடாமலிருக்க வேண்டும்.
5. கிப்லாவை முன்னோக்குவதில் மூன்று பகுதிகள் :
1. வெளி உறுப்புகள் அனைத்தையும் கிப்லாவை முன்னோக்கி வைப்பது.2. உள்ளத்தால் அல்லாஹ்வை முன்னோக்கி நிற்பது. ஏனெனில் உள்ளத்தின் கஃபா
அவனாகும்.
3. எஜமானனுக்கு முன்னால் எவ்வாறு உடல் முழுவதையும் முன்னோக்கி வைத்திருக்க வேண்டுமோ அவ்வாறு முன்னோக்கி நிற்பது.
6. நிய்யத் செய்தலில் மூன்று பகுதிகள் :
1. எந்தத் தொழுகையைத் தொழுகிறோம் என்று விளங்குவது.2. அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கிறோம் என்பதாகவும், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகவும் எண்ணுதல்.
3. அல்லாஹ் நம்மனதின் நிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என அறிதல்.
7. தக்பீர் தஹ்ரீமாவில் மூன்று பகுதிகள் :
1. அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தைத் தெளிவாகவும், சரியாகவும் உச்சரித்தல்.2. இரு கைகளையும் காதுகள் வரை உயர்த்துதல்.(இது அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தையும் என் பின்னால் எறிந்து விட்டேன் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.)
3. அல்லாஹூ அக்பர் என்று கூறும் பொழுது அவனுடைய உயர்வையும், மகத்துவத்தையும் மனதிற் கொள்ளுதல்.
8. நிலை நிற்பதில் மூன்று பகுதிகள் :
1. நிலை நிற்கும்பொழுது ஸஜ்தாவின் இடத்தில் பார்வையைச் செலுத்துவது.2. அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பதாக மனதில் எண்ணங்கொள்வது.
3. வேறு எந்தப் பக்கமும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
தொழுகையில் ஈடுபட்டிருப்பவர் தன் கவனத்தைப் பல பக்கங்களிலும் செலுத்துவதற்குப் பெரியோர்கள் ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு மனிதர் அரசனைச் சந்திக்க விரும்பி அரண்மனைக்குச் சென்று அங்குள்ள காவலர்களிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு அனுமதி பெற்று அரசனின் தர்பாருக்கு செல்கிறார். அங்கு அரசன் இம் மனிதனைக் கவனிக்க ஆரம்பித்த பொழுது இவர் தம் கவனத்தை அங்குமிங்கும் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அரசன் இவர் பக்கம் எவ்வாறு கவனம் செலுத்துவான் ? இவ்வாறுதான் தொழுகையில் அங்குமிங்கும் கவனம் செலுத்துபவரின் நிலையும் ஆகிவிடும்.
9. கிராஅத் ஓதுவதில் மூன்று பகுதிகள் :
1. குர்ஆனை ஓதும் முறையறிந்து ஒதுதல்.2. அதன் பொருளைச் சிந்தனையில் கொண்டு ஓதுதல்.
3. அதன் படிச் செயலாற்றுதல்.
10. ருகூஉச் செய்வதில் மூன்று பகுதிகள் :
1. இடுப்பும் தலையும் சமமாக இருக்கும் வண்ணம் குனிதல், மேலே உயர்த்தாமலும் கீழே தாழ்த்தாமலும் முதுகைச் சமமாக வைத்தல் (தலை, முதுகு, ஆசனம் ஆகிய மூன்றும் சமமாக இருக்கும் நிலையில் குனிய வேண்டுமென்று உலமாக்கள் எழுதியுள்ளனர்.)2. கைவிரல்களை விரித்தவாறு முழங்கால்களைப் பிடித்தல்.
3. ருகூஉடைய தஸ்பீஹூகளை கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் கூறுதல்.
11. ஸஜ்தாச் செய்வதில் மூன்று பகுதிகள் :
1. இரு கைகளையும் காதுக்கு நேராக வைப்பது.2. முழங்கை பூமியில் படாமல் தூக்கிவைப்பது.
3. தஸ்பீஹூகளைக் கண்ணியத்துடன் கூறுவது.
12. இருப்பில் மூன்று பகுதிகள் :
1. வலதுகாலை நட்டு வைத்து இடதுகாலைப் படுக்க வைத்து அதன்மீது உட்காருதல்.2. கண்ணியத்துடனும் பொருள் விளங்கியும் அத்தஹிய்யாத்தை ஓதுதல். ஏனெனில், அதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்மீது சலாம் கூறுதலும், முஃமின்களுக்கு துஆச் செய்தலும் அமைந்திருக்கின்றன.
3. ஸலாம் கொடுக்கும் போது மலக்குகளுக்கும், வலப்பக்கம் இடப்பக்கம் இருப்பவர்களுக்கும் ஸலாம் கூறுவதாக நிய்யத் செய்தல்.
பின்னர் இப்பன்னிரண்டு செயல்களையும் நிரப்பமாக்கி வைக்கின்ற இக்லாஸ் என்பதிலும் மூன்று பகுதிகள் உள்ளன.
1. இத்தொழுகையின் மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவது மட்டும் நோக்கமாக இருப்பது.
2. அல்லாஹ்வின் நல்லுதவியினாலேயே இத்தொழுகையை நிறைவேற்ற முடிந்தது என்று விளங்குவது.
3. இதற்குரிய நன்மை கிடைக்குமென்று நம்பிக்கை வைப்பது.
உண்மையில் தொழுகையில் மிகப்பெரிய நன்மையும் பரக்கத்தும் இருக்கின்றன. அதிலுள்ள ஒவ்வொரு திக்ரும் ஏராளமான நன்மைகளையும் அல்லாஹ்வின் பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. தொழுகையின் ஆரம்பத்தில் ஓதப்படும், "ஸூப்ஹானகல்லாஹூம்ம" என்ற ஃதனாவை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எத்தனை சிறப்புகள் கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
ஸூப்ஹானகல்லாஹூம்ம : யா அல்லாஹ் ! நீ மிகப் பரிசுத்தமானவன். குறைகள் அனைத்தையும் விட்டுத் தூய்மையானவனாகவும், தீமை அனைத்தையும் விட்டு நீங்கியவனாகவும் இருக்கிறாய் !
வபி ஹம்திக : புகழுக்குரிய, வாழ்த்துக்குரிய எத்தனை விஷயங்கள், இருக்கின்றனவோ அவை அனைத்தும் உனக்கே உரியன !
வதபாரகஸ்முக : உன்னுடைய திருநாமம் பரக்கத்துடையதாகும். உன் திருநாமம் கூறப்பட்ட பொருளும் பரக்கத்துடையதாகிவிடும்.
வ(த்)தஆலா ஜத்துக : உன் அந்தஸ்தும் மகத்துவமும் மிக்க உயர்வானதாகும்.
வலா இலாஹ ஃகைருக : வணக்கத்திற்குரியவன் உன்னையன்றி யாருமில்லை, வணங்குதற்குரிய நாயன் உண்ணையன்றி எங்கும் எப்போதும் கிடையாது.
இவ்வாறே, ருகூவில் ‘ஸூப்ஹான ரப்பியல் அளீம்’ மகத்துவமும் மதிப்பும் மிக்க என்னுடைய இரட்சகன் குறைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்பாதாகக் கூறி அவனுடைய உயர்வுக்கு முன்னால் தன்னைத் தாழ்மைப் படுத்தித் தன் இயலாமையை வெளிப்படுத்திக் காட்டுதலாகும். கழுத்தைத் தூக்கி தலை நிமிர்ந்து நிற்பது அகம்பாவம், பெருமையின் அடையாளமாகும். அதனைத் தாழ்த்திக் குனிவது வழிப்படுவதைக் குறிப்பதாகும். எனவே, ருகூவில் குனிவது, "உன்னுடைய சட்டங்களுக்கு முன்னால் நான் குனிந்துவிட்டேன். உனக்கு வழிப்படுவதையும், வணக்கம் புரிவதையும் என் தலைமீது ஏற்றுக் கொண்டேன். பாவங்கள் நிறைந்த என் உடல் உன் முன்னால் ஆஜராக உள்ளது. உன் சன்னிதானத்தில் நான் குனிந்து விட்டேன். நிச்சயமாக நீ உயர்வு மிக்கவன். உன் உயர்வின் முன்னால் நான் தலை வணங்கி நிற்கிறேன்" என்று விண்ணப்பித்துக் கொள்வதாகும்.
இவ்வாறே, ஸஜ்தாவில் ‘ஸூப்ஹான ரப்பியல் அஃலா’ என்பதிலும் அல்லாஹூத்தஆலாவுடைய எல்லையில்லா உயர்வையும், அவன் குறைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்பதையும் தெரிவிக்கிறோம். மனிதனின் உறுப்புகளில் அனைத்து உறுப்புகளிலும் சிறந்த உறுப்பாகிய சிரசையும், அதிலுள்ள கண், காது, மூக்கு, நாக்கு போன்ற அவனுக்குப் பிரியமான உறுப்புகளையும் அல்லாஹ்வின் முன்னால் தரையில் போட்டுவிடுவது, "யாஅல்லாஹ் ! என்னுடைய உயர்தரமான, எனக்கு மிக விருப்பமான இந்த உறுப்புகளையெல்லாம் உன் சமூகத்தில் ஆஜராக்கி உனக்கு முன்னால் அவற்றைத் தரையில் கிடத்திவிட்டேன். எனவே, நீ என்மீது கருணைகூர்ந்து இரக்கம் காட்டுவாய் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று விண்ணப்பிப்பதைப் போன்று அமைந்திருக்கிறது. இந்தப் பணிவு முதன்முதலாக அவனுக்கு முன் கைகட்டி மரியாதையுடன் நிற்பதின் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது. பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாக அவனுக்கு முன்னால் தரையில் மூக்கையும் தலையையும் வைத்து அழுத்துவதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தொழுகையின் நிலைகள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு தொழுவதுதான் தொழுகையின் அசல் வடிவமும், இம்மை மறுமையினுடைய வெற்றிக்குரிய படிகளுமாகும். ஸஆபிகள், பெரியோர்கள் அனைவரின் தொழுகையும் இவ்வாறே இருந்தது. ‘அவர்கள் தொழுகையில் நின்றால் அல்லாஹ்வைப் பயந்து நடுங்குபவர்களாக இருந்தார்கள்’ என்று முஜாஹித் ரலியல்லாஹூ அன்ஹூ குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் தன் அன்பினால் எனக்கும் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் இதன்படி தொழுவதற்குரிய நல்லுதவியைத் தந்தருள்வானாக !
(தொகுப்பு நூல் : அமல்களின் சிறப்புகள். பாகம் :தொழுகையின் சிறப்புகள்.)
யாஅல்லாஹ் ! உனது அருமை நபி(ஸல்) அவர்களின் கண்களுக்கு குளிர்ச்சி தந்ததும், உனது மன்னிப்பையும் பொருத்தத்தையும் பெற்றுத்தருவதுமான இந்த மேலான தொழுகையை எங்களது வாழ்க்கையில் நிலையானதாகவும் நிரப்பமானதாகவும் ஆக்கியருள்வாயாக ! ஆமீன் யாரப்பல் ஆலமீன். வ ஆகிர தாவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
" நிச்சயமாக முஃமின்கள் வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால் தம்தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்."
(அல் குர்ஆன் :18 :23 :1,2)
இவன்.
முஹம்மது பதுருதீன்.