Thursday 2 August 2007

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தஸ்பீஹ் மணி பித்அத்தா… ?!


அல்லாஹ்வை திக்ரு செய்யும்பொழுது எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படும் தஸ்பீஹ் மணி பித்அத் என்றும், ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தஸ்பீஹ் மணியெல்லாம் கிடையாது என காரணம் கூறி நிராகரிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் எடுத்துவைக்கும் நபிமொழிகளை முதலில் காண்போம்.

ஹதீஸ் 1 : நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி). நூல் : திர்மிதீ, நஸயீ.

ஹதீஸ் 2 : உங்கள் விரல்களால் எண்ணுங்கள் ! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி) நூல் : திர்மிதீ, அபூதாவூத்.

ஆகிய இந்த ஹதீஸ்களில் எந்த குழப்பமும் இல்லை. குழப்பமெல்லாம் இவர்கள் புரிந்துகொண்டதில்தான். நமது முன்னோர்களாகிய ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப்அதாபியீன்கள் எவ்வாறு குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரிந்துகொண்டார்களோ அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அவரவர் தத்தமது மனோஇச்சையின்படி புரிந்துகொள்ளும்பொழுதுதான் மார்க்கத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் மற்றும் பிளவுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக ஷியாக்கள், காதியானிகள், ளாகிரியாக்கள் மற்றும் பலர். அல்லாஹ் அத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

மேற்கண்ட ஹதீஸ்களிண்படி திக்ரை எண்ணுவதற்காகத்தான் நபி (ஸல்) தனது கரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். ஏனெனில் எந்த ஒரு அமலும் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் அவ்வளவே. உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப்பற்றி எச்சரித்துள்ளார்கள், அதாவது ஒருவர் தொழுவார் அது அல்லாஹ்விற்கின்றி அடுத்தவர் பார்ப்பதற்காக இருக்கும். ஏனெனில் அல்லாஹ் நம்மிடத்தில் பார்ப்பது நமது உள்ளத்தைத்தான், அது எந்த அமலாக இருந்தாலும் சரியே. அதுமட்டுமல்ல தஸ்பீஹ் மணி கொண்டு கை மற்றும் விரல்களால்தான் திக்ருகளை எண்ணுகிறோம் கால்களால் அல்ல என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

மேற்கண்ட ஹதீஸ்களை ஸஹாபா பெருமக்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்ப்பதற்கு முன் பித்அத் என்றால் என்ன ? என்பதை முதலில் அறிவோம்.


பித்அத் என்றால் என்ன ?

குர்ஆன் அல்லது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் செய்யப்படும் ஒரு அமலைத்தான் (இபாதத்) பித்அத் என்று கூறப்படும். அமல்களுக்கு உதவிபுரியும் பொருட்களெல்லாம் பித்அத் ஆகாது. இவ்வாறு கூறுவதுதான் பித்அத் ஆகும். ஏனெனில் மார்கத்தில் ஒரு விஷயம் கூடும், கூடாது என்று கூற அல்லாஹ் அல்லது ரசூலின் ஆதாரம் வேண்டும். உதாரணமாக கந்தூரி, கூடு போன்றவற்றை பித்அத் என்கிறோம். ஏனெனில் இது ஒரு இபாதத்தாக செய்யப்படுவதால். தஸ்பீஹ் மணி இபாதத் அல்ல அது திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் அவ்வளவே.

ஸஹாபா பெருமக்களின் புரிதல் :

இதற்குமுன் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வது நல்லது. ஒரு ஹதீஸ் அதுவும் பலமான ஹதீஸ்களில் முதல்தரத்தில் உள்ளதே இவர்களின் மனோஇச்சைக்கு ஒத்துவரவில்லையென்றால் குர்ஆனோடு மோதவிட்டு (?!) அதனை தூக்கியெறிய சொல்பவர்கள், அறிவிப்பாளர்கள் வரிசையில் உள்ள ஒருவரை யாராவது ஒரு இமாம், அவர்களின் கோணத்தில் ஆய்வு செய்ததில் ஒரு குறையை சொல்லிவிட்டால் அது இவர்களுக்கு சொல்லவே தேவையில்லை, அல்வா சாப்பிடுவதுபோல். இங்கு கவணிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஹதீஸை, நன்கு ஆய்வு செய்யாமல் மற்றவர்களின் ஆய்வுகளெல்லாம் தவறு ; தான் சொல்வதுதான் சரி என்று, ஹதீஸை பலவீனப்படுத்தி நிராகரித்தால் அது நபி(ஸல்) அவர்களின் சொல்லை நிராகரிக்க வேண்டி வருமே என்ற சிறிதளவு இறையச்சம்கூட இவர்களுக்கு கிடையாது. மற்றவர்களுக்கு பலமானதாக தெரிய இவர்களுக்கு மட்டும் பலவீனமானதாக தெரிந்தது ஆச்சரியமே. மற்ற மார்க்க அறிஞர்கள் ஆய்வு செய்து பலமானதாக சொன்னதால் நாமும் அவ்வாறே எடுத்துக்கொள்வோம்.

ஹதீஸ் : நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம்
பழக்கொட்டைகளை குவித்து வைத்திருந்தபொழுது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்பொழுது அவர்கள் நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹைவிடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா ? என கேட்டார்கள். உடனே எனக்கு கூறுங்கள் என்று நான் கூறினேன். அப்போது நபி(ஸல்)அவர்கள் ஸூப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு என்றார்கள்.
அறிவிப்பவர் : சஃபியா (ரலி) நூல் : திர்மிதீ


இந்த ஹதீஸின்படி ஸஹாபா பெருமக்கள் புரிந்துகொண்டது, நபி(ஸல்) திக்ருக்கு கரத்தை பயன்படுத்த சொன்னது எண்ணிக்கைக்காகத்தான். இதனை நபி(ஸல்) அவர்களும் தடுக்காமல் அங்கீகரித்தும் உள்ளனர். நாமும் சிந்தித்தால் இது உண்மையாகவேபடும். குறைந்த எண்ணிக்கையில் திக்ர் செய்ய தஸ்பீஹ் மணி தேவையில்லை வெறும் கையினாலேயே செய்யலாம். ஆனால் 1000 அல்லது 2000 என பெரிய எண்ணிக்கையில் திக்ர் செய்யவேண்டுமெனில் வெறும் கையினால் செய்யமுடியாது என்று நம்மை விட பித்அத் என்று கூறுபவர்களுக்கு நன்றாகவே விளங்கும். அவர்கள் தஸ்பீஹ் மணியை தவிர வேறு எதை பயன்படுத்தினாலும் (நோட்புக், பேனா,பென்ஸில்,மெக்கானிக்கள் கெளன்டர்,எலக்ட்ரானிக்ஸ் கெளன்டர்) முதலியவைகள் இவர்களின் விளக்கத்தின்படி பித்அத் ஆகும். அல்லது கைவிரலைக்கொண்டு எண்ணுகின்ற அளவுக்குத்தான் திக்ர் செய்யவேண்டும் என்றும் பொருள்படும். எனவே இவர்கள் புரிந்துகொள்வதை ஒதுக்கிவிட்டு ஸஹாபா பெருமக்கள் புரிந்து கொண்டதை எடுத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.

இவர்கள் கூறும் மற்ற கற்பனைகள் :

எப்பொழுதும் அல்லாஹ்வின் நினைவில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்திவிட்டது.

தம்பட்டம் அடிக்கவைப்பது அவர்களது உள்ளம்தான். வெறும் கை விரல்களால் எண்ணும்பொழுது கூட மற்றவர்கள் பார்க்கும்பொழுது இவர் திக்ர் செய்கிறார் என்று அறியமுடியும். தம்பட்டம் இப்பொழுதுகூட வர வாய்ப்புண்டு. எனவே சரிசெய்யப்படவேண்டியது உள்ளம்தான் தஸ்பீஹ் மணியல்ல.

தஸ்பீஹ் மணியை திக்ரு செய்கிறேன் என்ற பெயரில் கையால் உருட்டிக்கொண்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் நாம் காண முடிகிறது.


இதுவும் உள்ளம் சம்பந்தப்பட்டதுதான். உதாரணமாக நபி (ஸல்) கூறினார்கள். தொழும் பொழுது அல்லாஹ்வை நீ பார்க்கின்றாய் அல்லது அல்லாஹ் உன்னை பார்க்கின்றான் என்ற நிலையில் தொழவேண்டும். ஆனால் தொழுகையில் நின்றபின்தான் ஷைத்தான் உலக சிந்தனைகள் அனைத்தையும் உள்ளத்தில் போடுவான். இது ஷைத்தானால் ஏற்படும் கோளாறு, தஸ்பீஹ் மணியால் அல்ல. உள்ளத்தை தூய்மைபடுத்தினால் சரியாகிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு.

இவ்வாறு கூறுபவர்கள் மற்ற அமல்களில் கடைப்பிடிக்கிறார்களா ? என்றால் இல்லை. உதாரணமாக தொழுகையின் நேரத்தை அறிய நபி (ஸல்) காட்டித்தந்த முறையை பார்ப்போம்.

ஹதீஸ் : ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததுமுதல் ஒரு மனிதரின் நிழல் (சரியாக) அவர் உயரத்தைப் (போன்று) ஆகின் (நேரம்) வரையிலாகும். மேலும் அஸர் நேரம் வராதவரையிலாகும். அஸரின் நேரம் சூரியன் மஞ்சள் மாறாதவரையிலாகும். மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும். ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலாகும். சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிருத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது. என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ, பின் அம்ரு ரலியல்லாஹூ அன்ஹூமா. நூல் : முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸிற்கு மாற்றமாக இப்பொழுது தொழுகையின் நேரத்தை அறிய கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இது நபி (ஸல்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. அதைப்போல் ஜகாத் கணக்கிட கால்குலேட்டர், ஹஜ்ஜுக்கு செல்ல விமானம் மற்றும் பேருந்து இவைகளையெல்லாம் அந்தந்த அமலுக்கு உதவும்பொருள்தான் என விளங்கியவர்களுக்கு தஸ்பீஹ் மணி மட்டும் பித்அத் ஆக விளங்கியது ஆச்சரியமே.

எனவே தஸ்பீஹ் மணி திக்ர் என்னும் அமலுக்கு உதவும் ஒரு பொருள்தான் என்பதை அறியலாம். மேலும் இதனால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

1. தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் உள்ளம் அல்லாஹ்வோடு ஒன்றிவிடுகிறது.

2. தஸ்பீஹ் மணி கையில் வைத்திருப்பதால், திக்ர் செய்ய மறந்துவிட்டாலும் மீண்டும் திக்ர் செய்ய தூண்டும் பொருளாக உதவுகிறது.

எனவே தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் பித்அத் அல்ல என்பதை விளங்களாம். ஆனால் அதேசமயம் தஸ்பீஹ் மணி கொண்டு மட்டும்தான் திக்ர் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பித்அத் அல்ல என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.

இவன்
முஹம்மது பதுருதீன்.