Thursday 26 February 2009

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அண்ணன் பி.ஜெ.யின் குழப்பமும் உலமாக்களின் விளக்கமும்

பாகம் – 2

அல்லாஹ்வின் பாதையாகிய தப்லீஃக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதன் செயல்பாடு மற்றும் நோக்கத்தை குறைசொல்ல முடியாதோர் உலக ஆதாயங்கள், விதண்டாவாதங்கள் மற்றும் குறிப்பாக தப்லீகின் தஃலிம் கிதாபுகளில் (அமல்களின் சிறப்புகள்) சொல்லப்பட்ட இறைநல்அடியார்களின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்ற சில அற்புத உண்மை சம்பவங்கள் ஆகியவைகள் மீது அவதூறுகளை கூறி இந்த அல்லாஹ்வின் பாதையின் மீது குறை சொல்ல முற்படுகின்றனர்.

அந்த வரிசையில் அண்ணன் பி.ஜெ. கூறும் லைலத்துல் கத்ர் இரவு குற்றச்சாட்டும் ஒன்று. அதனை கீழே உள்ள வீடியோ கிளிப்பில் கேட்கவும்.


பி.ஜெ.யின் குழப்பம் : லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமழான் மாதத்தில் தான் என்பதில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒரு மித்த கருத்தில் இருக்க ஷஃபான் மாதத்திலும் லைலத்துல் கத்ர் இருப்பதைக் கண்டதாக இப்னு அரபி கூறியதாக ஜக்கரியா ஸாஹிப் தஃலீம் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உலமாக்களின் விளக்கம் : லைலத்துல் கத்ர் ரமழான் மாதத்தில் தான் என்பதில் முஸ்லிம்கள் ஒரு மித்த கருத்தில் இருக்கிறார்களாம். இது எவ்வளவு பெரியபொய் லைலத்துல் கத்ர் எந்த இரவு எனக் கணிக்கும் விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 60க்கு மேற்பட்ட முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றனவென்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் மடமைக்கு இன்னுமோர் எடுத்துக் காட்டு.

அக்கருத்துக்களில் “ரமழான் அல்லாத ஏனைய மாதங்களிலும் அவ்விரவு வரலாம்” எனவும் ஒரு கருத்து இருக்கின்றது இதோ :

“அவ்விரவு முழு வருடத்தில் ஏதோ ஓர் இரவில் வரலாம்” இது இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா, அபூ ஹனீபா, அபூ யூஸூப், முஹம்மத் மற்றும் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களின் பிரபல்யமான கருத்து

நூல் : பாகம்/பக்கம் :

1. ஸஹீஹ் முஸ்லிம் 8/52/1169
2. அப்துர்ரஸ்ஸாக் 4/194/7730
3. தஹாவி 2/54
4. ஆரிழதுல் அஹ்வதி 4/07
5. தம்ஹீத் 1/403/405
6. மஆரிபுஸ்ஸூனன் 5/517/518
7. பத்ஹூல் பாரி 4/321
8. உம்ததுல் காரீ 11/187
9. இர்சாதுஸ்ஸாரி 4/596
10. நய்லுல் அவதார் 4/289
11. அவ்ஜஸூல் மஸாலிக் 5/2
12. ஷர்ஹூஸ்ஸத்ர் 27
13. ஸூதூஉல்பத்ர் 71
14. ஷரஹூ முஸ்லிம் 8/47
15. மிர்காத் 4/507
16. ஷரஹூல் உப்பி 4/128-136
17. ஸனுஸி 4/136


இமாம் தர்தீஹ் (ரஹ்) கூறுகிறார்கள் “அவ்விரவு குறித்த ஒரு இரவிலே இருக்காது மாறாக முழு வருடத்திலும் ஏதோ ஒர் இரவில் மாறி மாறி வரும்” இது இமாம்களான மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், மற்றும் பெருந்திரலான அறிஞர்களின் கருத்துமாகும். இது தான் முதன்மை வகிக்கும் மிகச் சரியான கருத்தாகும்.

நூல் : பாகம்/பக்கம் :
1. அவ்ஜஸூல் மஸாலிக் 5/253
2. தம்ஹீத் 1/403

ஷாஹ் வலிய்யுல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்கள் “லைலத்துல் கத்ர் ஒரு வருடத்தில் இரு முறை வருகிறது 1. ரமழான் மாதத்தின் கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் 2. வருடத்தின் ஏனைய மாதங்களின் ஒரு இரவில்”.

நூல் : பாகம்/பக்கம் :

1. அவ்ஜஸூல் மஸாலிக் 5/255
2. ஹூஜ்ஜதுல்லா 2/99

இமாம் அபூபக்கர் ராஸி (ரஹ்) “லைலத்துல் கத்ர் குறித்த ஒரு மாதத்துக்குச் சொந்தமானதல்ல”

நூல் : பாகம்/பக்கம் :

1. உம்ததுல் காரீ 11/187
2. இர்ஷாதுஸ்ஸாரி 4/596

நல்லோர்கள் நடு நிலையாய் நின்று பார்க்கட்டும் லைலத்துல் கத்ரை ஷஃபான் மாதத்தில் கண்டதாக இப்னு அரபி (ரஹ்) அவர்கள் கூறியது குர்ஆனுக்கு முரண்பட்ட விஷயமாக இருந்தால் இதே கருத்தைச் சொன்ன கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களான இப்னு மஸ்ஊத்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் இமாம்களான இக்ரிமா, அபூஹனிபா, அபூயூஸூப், முஹம்மத், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத், தர்தீஹ், அபூபக்கர்ராஸி, ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) ஆகியோர்களைப் பார்த்தும் இந்த வஹ்ஹாபிகள் “இவர்களெல்லாம் குர்ஆனுக்கு முரண்பட்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என குரல் எழுப்பவார்களா ?

உண்மை என்னவென்றால் ஸூபித்துவத்தின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னு அரபி (ரஹ்) அவர்கள் மீது பி.ஜெ. மற்றும் அவர் தொண்டர்களுக்கு ஏற்பட்ட தனிக் கோபம், கொள்கை முரண்பாடு என்பனவற்றின் காரணமாகவே இதே கருத்தை பல இமாம்கள் சொல்லியிருந்தும் இமாம் இப்னு அரபி அவர்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்.

இமாம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் (குர்ஆனுக்கு முரண்பட்ட ?!!) கருத்தை ஜகரிய்யா(ரஹி) அவர்கள் எழுதியதனால் அவர்களையும் அவர்களுடைய தஃலீம் தொகுப்பையும் சாடுவதாக இருந்தால் இதோ முழு உம்மத்தினர்களும் தலைமேல் வைத்து மதிக்கும் மேற்கூறப்பட்ட இமாம்கள் தங்கள் ஆயுளை அர்ப்பணித்துத் தொகுத்த நூல்களிலும் (குர்ஆனுக்கு முரண்பட்ட ?!!) அதே கருத்து வந்திருக்கிறதல்லவா ? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைக் கவணிக்கும் விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் உள்ள கருத்து முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் போதுதான் இப்னு அரபி (ரஹ்) அவர்களுடைய கருத்தையும் எழுதினார்களே தவிர அக்கருத்தைத் தனது கொள்கையாகவோ, அல்லது அதுதான் பலமான கருத்து என்றோ கூறவில்லையே. அப்படியென்றால் அல்லாஹ் அல் குர்ஆனில் பற்பல இடங்களில் இஸ்லாமிய இறையியற் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட பற்பல கருத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளான். இதனால் அக்கருத்துக்களை அல்லாஹ் ஆதரிக்கிறான் என்ற அர்த்தமா ?!! இதனால் குர்ஆனையும் ஒதுக்கித் தள்ளப் போகிறீர்களா ?!! அப்படியானால் பல்லாயிரம் உள்ளங்களைப் பண்படுத்திப் புத்துயிர் கொடுத்து வரும் தஃலீம் தொகுப்புடன் மாத்திரம் ஏன் இந்தக் குதர்க்கம்.?! வஸ்ஸலாம் !

(நன்றி : வெளியீடு மௌலானா ஸகரிய்யா (ரஹி) ஆய்வு கூடம், வெளிகாமம், இலங்கை.)


"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகின்றோம். அது பொய்யை நொருக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது."

(அல் குல்ஆன் : 21 :18)

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக !

(அல் குர்ஆன் : 17 :81)

"சத்தியமே வெல்லும் ; அசத்தியம் அழிந்து போகும்" என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே ! வஆகிர தாவானா வனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

விளக்கங்கள் ஓய்வதில்லை… !


இவன்.
முஹம்மது பதுருதீன்.

1 comment:

م. محمد said...

அல்ஹம்துலில்லாஹ். மிக்க நன்றி, தங்களின் இந்த விளக்கம் பல நாட்களாக fb ல் போடுவதற்காக தேடிக்கொண்டிருந்தேன்.ஏன் என்றால் அந்த சமூக வலைதளத்தில் பலர் இந்த விஷயத்தை பரப்பி மக்களை குழப்பிக்க்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய blog link இணைத்து கொடுக்கப்பட்டதால் பல மக்கள் பயன் அடைவார்கள் இன் ஷா அல்லாஹ்